டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத் திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த நிறுவனம், இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி தம்பதியால் நடத்தப்பட்ட ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்துக்கு  சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதில், சர்ச்சைக் குரிய பணம், மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரத்திற்கு  சொந்தமான நிறுவனத்திற்கு தரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.  அப்போது ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்ததால், அவரது அனுமதியின் பேரிலேயே இந்த முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது.

இதற்கிடையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், தற்போது சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதற்காக எழுத்துமூலம் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இந்த முறைகேடு  தொடர்பாக சி.பி.ஐயும்,  சட்ட விரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கத்துறையும் வழக்குகள் பதிவு செய்துள்ன. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே ஜாமின் பெற்றுள்ள நிலையில், ப.சிதம்பரமும் முன் ஜாமின் கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு மேல் முறையீட்டு நடவடிக்கைகளுக்காக 3 நாள் இறுதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.