சென்னை: சென்னையில் வடிகால் திட்ட பணிகளில் தாமதம் செய்ததாக,  3ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்து உள்ளது. 3 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.75,000 அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த வடகிழக்கு பருவமழையின்போது பெய்த கனமழையால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், இனி வரும்  காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர்களை கொண்ட வெள்ள மேலாண்மை குழுவினை அமைத்தார். அதைத்தொடர்ந்து,   மழைநீர் வடிகால் கட்டும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் சில பகுதிகளில் தாமதப்படுத்தப்படுகின்றன. இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணிகளை முடிக்காமல் தொய்வு ஏற்படுத்தியது ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2071 கி.மீ., நீளமுள்ள 8835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கி.மீ., நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மழைநீர் வடிகால் திட்டப் பணிகளில் வேம்புலி அம்மல் சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, ரங்கையா சாலைக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காமல் தொய்வு ஏற்படுத்திய 3 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25000 என மொத்தம் ரூ.75000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணியில் தொய்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.