டெல்லி: கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அவர்கள் கால்லூரிகளில் பயில்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

‘டிஸ்கால்குலியா” என்ற கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த நமன் வர்மா என்பவர்  மும்பை ஐ.ஐ.டியில் முதுநிலை டிசைன் பாடத்தில் சேர்வதற்காக  விண்ணப்பித்திருத்தார். ஆனால் இவரது உடல்நிலையை காரணம் காட்டி, அவரது விண்ணப்பத்தை ஐஐடி நிராகரித்தது. இதை எதிர்த்து, வர்மா  மும்பை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்தார். அவரது மனுவில், சட்டப்பிரிவு 226 பிரிவின் கீழ் ஐஐடியில் சேர்த்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம், நமன் வர்மாவை ஐஐடியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி,  ஐ.ஐ.டி மும்பையில் டிசைன் பாடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். பின் கடந்த 2018-ஆம் ஆண்டு தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். இருப்பினும் அவருக்கு டிகிரி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இதை எதிர்த்து, வர்மா சார்பில்,  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த   உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 142-ன் கீழ் நமன் வெர்மா டிகிரி வாங்குவதற்கு தகுதியான நபர் என தீர்ப்பளித்தது. இன்னும் 4 வாரத்தில் வருக்கு டிகிரி வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு கற்றல் குறைபாடு உள்ள நபர்கள் கால்லூரியில் பயில்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.