சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு  மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனால்,  சென்னை மற்றும் புறநகர் பகுதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் சூறாவளிக்காற்று இன்றும், நாளையும் வீசக் கூடும் என்றும், இந்த 2 நாட்களிலும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன்,  மழை பெய்யாத நிலையில் இரவில் கடும் குளிரும், பனியும் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்க கடலில் பரவி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வட மேற்கு திசையில் 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து தற்போது,  மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு வங்ககடலில் சென்னையில் இருந்து 130 கி.மீ கிழக்கு, வட கிழக்கு திசையிலும், நெல்லூரில் இருந்து 210 கி.மீ தொலைவில் தென் கிழக்காகவும், மசூதிப்பட்டினத்தில் இருந்து 340 கி.மீ தூரத்தில் தெற்கு-தென்கிழக்காகவும் நிலை கொண்டிருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நெருங்கி தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதன் காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வரும் 25ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில்   மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மழை இல்லாவிட்டாலும், கடும் குளிரும், பனிப்பொழிவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நேற்று (21.11.2022) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு  மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

நேற்று (21.11.2022) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு  மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதன் காரணமாக,

22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

23.11.2022 மற்றும் 24.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

25.11.2022 மற்றும் 26.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

22.11.2022: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா,  இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் `சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.