டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று தமிழ்நாடு வெள்ள நிவாரணம் தொடர்பாக காரசார விவாதம்  நடைபெற்றது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்., ஆ.ராஜா அகியோர் மத்தியஅரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசை கண்டித்து திமுக உறுப்பினர்கள்  அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  டிசம்பர் 31ந்தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று மக்களவை கூடியதும், திமுக எம்.பி.  டி.ஆர். பாலு, தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி பேசினார்.

 அப்போது, குறுக்கிட்டு, மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் பதில் அளித்தார்.. இதனால் ஆவேசமடைந்த டி.ஆர். பாலு, நித்யானந்த ராய் எம்.பி., ஆக இருக்கவே தகுதியற்றவர், அவருக்கு ஒழுக்கமாக இருப்பது எப்படி என கற்றுக் கொடுங்கள் என  கூறினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை எப்படி தகுதியற்றவர் என கூறலாம் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் டி.ஆர். பாலுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று பாஜக உறுப்பினர்களுக்கு எதிராக ஆவேசமாக பேச தொடங்கினார். அதைத்தொடர்ந்து,  திமுக எம்.பி., ஆ. ராசா பேசும்போது , “மாநில பேரிடர் நிதி என்பது வேறு, தேசிய பேரிடர் நிதி என்பது வேறு. மாநில பேரிடர் நிதி என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு வழங்குவது தான். மாநில பேரிடர் நிதி வழங்கியதை வெள்ள நிவாரண நிதி வழங்கியதாக ஒன்றிய அமைச்சர் குழப்பி கொள்கிறார். வெள்ள சேதங்கள் தொடர்பான தமிழ்நாடு அரசு தந்த அறிக்கை மற்றும் ஒன்றிய அரசு குழு அளித்த அறிக்கை ஒன்றிய அரசிடம் உள்ளது. 2 அறிக்கைகள் கையில் உள்ளபோதும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்க மறுக்கிறது.

குஜராத்தை போல அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு சமமாக நடத்த வேண்டும். தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி தரும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டுகிறது” என்றார்.

இதனால், திமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால், மக்களவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்காததை கண்டித்து, திமுக எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.