திண்டுக்கல்

திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிக்கு வரும் 11 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் சுரேஷ்பாபு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டு ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இந்த வழக்கு வந்ததாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் டாக்டரிடம் ரூ.20 லட்சம் வாங்கியதோடு, கடந்த 1-ந்தேதி மீண்டும் ரூ.20 லட்சம் வாங்கிய போது அங்கித் திவாரியைத் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர். மதுரையில் அங்கித் திவாரியின் வீடு, அலுவலகத்தில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அரசு டாக்டரிடம் லஞ்சம் வாங்கியதில் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா? என்று அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து அவர் கடந்த 14-ந்தேதி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய ஜாமீன் மனுவை, மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நேற்று காணொலிக்காட்சி மூலம் திண்டுக்கல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அங்கித் திவாரி முன்னிறுத்தப்பட்டார். அப்போது அவரை வருகிற 11-ந்தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி பிரியா உத்தரவிட்டார். எனவே அவர் மீண்டும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.