டெல்லி: CUET நுழைவு தேர்வுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து விலக்கு பெற பாமக தலைவர்  அன்புமணி ராததாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகத்தின் நுழைவு தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. CUET நுழைவு தேர்வுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் 2021ல் 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தேர்ச்சி என மட்டுமே  வழங்கப்பட்டது. சான்றிதழ் வழங்கப்படவில்லை.  இதனால், தமிழக மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது. இது தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் CUET நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களால் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

தமிழகத்தில் 2021-ல் கரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஜே.இ.இ கூட்டு நுழைவுத் தேர்விலும் இதே நிலை ஏற்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதைத் தொடர்ந்து தமிழக அரசு கேட்டுக் கொண்டதால், ஜே.இ.இ கூட்டு நுழைவுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு தரப்பட்டது. அதே முயற்சி இப்போதும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

CUET நுழைவுத்தேர்வு மட்டுமின்றி, அடுத்து நடைபெறவுள்ள நீட் தேர்விலும் இதே சிக்கல் ஏற்படக் கூடும். எனவே, CUET மற்றும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு பெற வேண்டும் என கூறியுள்ளார்.