மன்னார்குடி:
திருவாரூர் அருகே உள்ள மன்னார்குடியில் பட்டாசு தயாரிப்பு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு கிடங்கில் இன்று காலை திடீரென வெடிவிபத்துரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉ ள்ளது.
மன்னார்குடியில் அருகே உள்ள பாமினி ஆற்றங்கரையோரம் தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கோவில் திருவிழாவுக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில், அந்த பகுதியை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் பங்குனி திருவிழா நடைபெற்று வருவதால், பட்டாசு தயாரிக்கும் பணியும் இரவு பகல் பாராது நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல சுமார் 9 மணி அளவில் பட்டாசு தயாரிக்கும் பணியில் பலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, திடீரென எதிர்பாராத விதமாக பட்டாசில் தீ பிடித்து வெடித்து சிதறியது.
இதில், பட்டாசு தயாரித்த கட்டிடம் மொத்த இடிந்து விழுந்தது. பட்டாசுகளும் வெடித்து நாலாபுற மும் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் சிதறி பலியாகினர். அதிக காயம் அடைந்த மேலும் ஒருவரும் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த சுரேஷ், பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு, வீரய்யன் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுட்டு வருகின்றனர்.
இந்த கோர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.