சென்னை:

காலா படம் தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் 23ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜிஎஸ்ஆர் விண்மீன் கிரியேஷன்ஸ் உரிமையாளராளர்  கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா. இவர், சென்னை பெருநகர 6 வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,” இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளேன்.

கடந்த 1996-ம் ஆண்டில் சென்னை பாம்குரோவ் ஓட்டலில்  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மூலமாக கரிகாலன், உடன் பிறவா தங்கச்சி ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன். கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் என்னுடையது.   மேலும் இந்த கரிகாலன் திரைக்கதையை வேறு பல சினிமா நிறுவனங்களின் தயாரிப்பாளர்களிடமும் கூறியுள்ளேன். என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘காலா என்ற கரிகாலன்’ என்ற படத்தை ஆரம்பித்து உள்ளனர்.

ஆகவே, என்னுடைய கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் அதன் மூலக்கதையை இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், வொண்டர்பார் பிலிம்ஸ், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் ஆகியோர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை 6-வது உதவி உரிமையியல் நீதிபதி தமிழரசி, இதுதொடர்பாக பதிலளிக்க எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று ஜூன் 15ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கரிகாலன் பட தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் ரஞ்சித், ரஜினி ஆகியோர் தரப்பில் தாங்கள் பதில் அளிக்க ஒரு வார கால அவகாசம் கோரினர்.

 

இதையடுத்து உரிமையியல் நீதிமன்றம் ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை 23-ம் தேதிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.