மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் கிளை அறிவித்து உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள்தண்டனை பெற்ற கைதிகள்  7 பேர் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிசந்திரன், சார்பில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவில்,  அரசியல் தலையீடு காரணமாக தாங்கள் விடுதலை செய்யப்படாமல் இன்னும் சிறையிலேயே இருப்பதாகவும், இவ்வாறு சிறையிலேயே இருப்பது மன உளைச்சலை ஏற்படுவதோடு, உடல் நலத்தையும் பாதிக்கிறது.  20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களுக்கு முன் கூட்டியே விடுதலை அளிப்பது தொடர்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டமும், மனிதநேய அடிப்படையில் வழிவகுக்கிறது. ஆனால், 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்யப்படாமல் உள்ளோம், தங்களை  விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள், பாரதிதாசன், நிஷா பானு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி,தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆகவே, இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு குறித்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர்,  குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறி வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.