டெல்லி: நடைபெற்று முடிந்த இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இரு மாநிலங்களிலும் யார் ஆட்சியை  கைப்பற்றுவார்கள் என்பது இன்று பிற்பகல் உறுதியாகும்.

68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகfள் கடந்த ஒரு மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு  இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதுபோல  182 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  முதல்கட்ட தேர்தலானது  89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இதையடத்து, இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவினர் இங்கும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் வரிந்து கட்டியிருந்தன. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க முடியும் என பா.ஜனதா நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அதேநேரம் இழந்த ஆட்சியை கைப்பற்றுவோம் என காங்கிரசும் நம்பிக்கையுடன் இருக்கிறது. இதில் யாருடைய கனவு பலிக்கும்? என்பது இன்று தெரிந்து விடும்.

குஜராத் மாநிலத்தில் பாஜக வெற்றிபெறும் என்றே அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவித்து உள்ளன. இருந்தாலும் இன்று பிற்பகல் யார் யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்பது தெரிதய வரும்.
இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.