சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து  கொரோனா படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில்  புதிதாக  1,752 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,61,072  ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து 514 பேர் குணம் அடைந்த நிலையில், இதுவரை 2,43,909பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்றும் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்த நிலையில்,  இதுவரை 4,302 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில்,  சென்னையில் 12,861 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

‘சென்னையில் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக கூறியுள்ள சுகாதாரத்துறையினர்,. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைளில் உள்ள கொரோனா வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.