சென்னை: திரையரங்குகள் 100% இருக்கை, டாஸ்மாக் பார் திறக்க அனுமதி உள்பட பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக   தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,  அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, நலவாழ்வுத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்டவற்றின் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து, மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் ஊரடங்கு நவம்பர் 15ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிப்பு.

அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.

திரையரங்குகள் நூறு சதவிகிதம் பார்வையாளர்களுடன் நவம்பர் 1ந்தேதி முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.

கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, நூறு சதவிகிதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் / மையங்கள் நூறு சதவிகிதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்’

பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்படலாம் என்ற கட்டுப்பாடு இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

நவம்பர் 1 முதல் கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன், தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி

திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

இவ்வாறு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.