நாகர்கோவில்:
நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் மற்றும் 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 147 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ், அங்கு வேலை செய்த 2 பிளம்பர்கள், ஒரு காண்டிராக்டர் ஆகியோரும் அடங்குவர்.

நோய் பாதித்த பிளம்பர்கள் வேலை செய்த இடத்தில் ஆய்வு பணியை மேற்கொண்ட ஆண் மருத்துவ அதிகாரியும், பெண் மருத்துவ அதிகாரியும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதேபோல் திருவட்டார், பொன்மனை, மங்கலக்குன்று ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 போலீசாரும், குழித்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு நர்ஸ், புதுக்கடை மற்றும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 2 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட ஜெயிலில் கைதியாக உள்ள தக்கலை பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.

அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அதிகாரிகள் கின்சால் தலைமையில் மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள் மாவட்ட ஜெயிலுக்குள் சென்று கைதி அடைக்கப்பட்டு இருந்த அறையை கிருமி நாசினி தெளித்து பூட்டினர். சிறை வளாகத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்த கைதியுடன் அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் வேறு, வேறு அறைகளில் தனிமைப்படுத்தப் பட்டார்கள். மேலும் சிறையில் உள்ள கைதிகள், சிறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் என 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சளி மாதிரிகளை மாநகராட்சி நகர்நல மையங்களைச் சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள் சேகரித்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கான பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளிவரும்.

மாவட்ட ஜெயிலுக்கு வந்து செல்லும் போலீசார் மூலமாக கைதிக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளது என்று மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால் தெரிவித்தார். ஜெயிலுக்குள் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அங்குள்ள கைதிகளும், சிறைத்துறையினரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் மற்றும் 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.