ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதியாக மொத்த பாதிப்பு 500ஐ தாண்டியது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் 5 நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
இந்தநிலையில் தற்போது ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே கொரோனாவின் தாக்கம் அதிகரிக்குமோ என்று எண்ணம் ஏற்பட தொடங்கியது.
புதிய பாதிப்பில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 17 பேர் உள்ளனர். கோபி மொடச்சூரில் 2 பேருக்கும், தனியார் நர்சிங் கல்லூரியில் ஒரு பெண்ணுக்கும், பி.கரட்டுப்பாளையம் அண்ணாநகரில் 15 வயது சிறுவனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெருந்துறை, கெட்டிச்செவியூர், சித்தோடு, புஞ்சைபுளியம்பட்டி, செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 509 ஆக உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 306 பேர் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். 195 பேர் சிகிச்சையில் இருக்க 8 பேர் பலியாகியுள்ளனர்.