நாகை: வங்கக்கடலில் உருவான காற்றதழுத்த தாழ்வு மண்டலம் இன்று சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால், கடற்கரையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி, காரைக்கால், நாகை துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று 4வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் கனமழையால், மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

இந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து நாகை உள்பட பல துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவர்கள் கரைகளில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பாம்பன் துறைமுகத்திலும், ராமேஸ்வரம் துறைமுகத்திலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் நாளை கடற்கரை கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூட செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.