சென்னை: தொடர் ஊரடங்கு காரணமாக, பள்ளிக் கல்வியில் பாடங்களை குறைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது; குறித்த நேரத்தில் பள்ளிகளை திறந்து பாடம் நடத்த முடியாததால், கல்வி முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக, மாணாக்கர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.
தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் நடத்தினால், அரசு நிர்ணயிக்கும் காலத்தில் பருவத் தேர்வுகளை நடத்த முடியாமல் சிக்கல் ஏற்படும். எனவே, பாடங்களின் அளவைக் குறைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்ற ஆலோசனையும் வருகின்றன. பாடத்திட்டத்தை குறைப்பது என்பது, அடிப்படைக் கல்வியில் சில அம்சங்களை தவிர்த்துவிட்டுப் பாடம் நடத்தி, மாணாக்கர்களை அடுத்த நிலைக்கு அனுப்புவதாகும்.
பாடத்திட்டங்களின் சில அம்சங்களை விட்டு விட்டு பாடம் நடத்தினால், சில அடிப்படைத் தகவல்களையும், அதற்கான கல்வியறிவையும் பெறாமல், மாணாக்கர்கள் அடுத்த வகுப்பிற்கு முன்னேறிச் செல்லும் நிலை ஏற்படும். அதனால், அடுத்தக் கல்வியாண்டில், அவர்கள் படிக்கும் பாடங்களுக்கு அடிப்படை தெரியாமல், பாடங்களை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, பாடத்திட்டத்தை குறைப்பதற்கு பதிலாக, கூடுதல் பாடங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை மட்டும் குறைத்துக் கொள்ளலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. எனவே, இதுதொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்டு அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.