பெங்களூரு

ர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்  அப்போது அவர்,

“பிரதமர் மோடி எந்த விதமான வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. அதனால் இந்த முறை நடைபெறும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மோடியின் செல்வாக்கு எடுபடாது. மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தில் பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளது. பாஜக தார்மிக ரீதியில் திவாலாகிவிட்டது.

எனக்கும், சித்தராமையாவுக்கும் இடையே மோதல் இருப்பதாக பாஜக தவறான தகவலைப் பரப்புகிறது. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும்.

நாங்கள் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு ரீதியாகக் கட்சியை வலுப்படுத்தியுள்ளோம்.   கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் கட்சி பணியாற்றியுள்ளோம்.  முதல்வர் பதவி விஷயத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

பாஜக இந்த சமுதாயத்தை உடைக்க முயற்சி செய்கிறது. நாங்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்குத் தடை விதிப்பதாக எங்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.   

காங்கிரஸ் கட்சிக்கு அவதூறு பேச்சு மீது நம்பிக்கை இல்லை.  பேச்சுகளைத் திரித்து அதைத் தவறாகப் பயன்படுத்தும் கலை பாஜகவுக்கு நன்கு தெரியும். மோடி தன்னை காங்கிரஸ் கட்சி அடிக்கடி அவதூறாகப் பேசுவதாக அழுகிறார். இந்த விஷயத்தை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் வளர்ச்சி பணிகள் அடிப் படையில் தேர்தலை எதிர்கொள்கிறோம்.”

எனத் தெரிவித்துள்ளார்.