பெங்களூரு

மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படு, எனக் கர்நாடக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள சித்தாபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவை எதிர்த்து பாஜக சார்பில் மணிகண்ட ரதோட் களமிறங்குகிறார். கடும் சர்ச்சைக்குரிய வேட்பாளரான இவர் மீது 30-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. கடந்த நவம்பர் மாதம் பிரியங்க் கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  தற்போது இவர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், மல்லிகார்ஜுன கார்கேவை அவதூறான வார்த்தைகளில் திட்டி அவரது குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவேன் என்று பேசும் ஆடியோவை வெளியிட்டார்.

அவர் இது குறித்து,

“காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அவரது மனைவி, குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாகக் கூறுவதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.  ஏனெனில் அப்படிப் பேசியவர் சாதாரணமானவரும் இல்லை. அவர் பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் பொம்மையின் செல்லப்பிள்ளையான சித்தாப்பூர் பாஜக வேட்பாளரே தான்.  இதில் பிரதமர் அமைதியாகவே இருப்பார், கர்நாடக போலீசும், தேர்தல் ஆணையமும் மவுனமாகவே இருக்கும். கர்நாடக மக்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. மாறாக அவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்”

என்று தெரிவித்தார்.

காங்கிரஸின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,

“நாங்கள் இந்த விவகாரத்தை மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறோம். இந்த விவகாரத்தில் அடங்கி இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். நிச்சயம் சட்டம் தன் கடமையைச் செய்யும்”

எனத் தெரிவித்துள்ளார்.