நாகர்கோவில்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி காங்கிரஸார் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.  கடந்த 10ஆம் தேதி அன்று தக்கலையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்ட கூட்டத்தில் சீமான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.  அப்போது அங்குப் பேசிய பேச்சாளர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது போல் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைக் கொலை செய்வோம் எனப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் குமார் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணம் இடை அளித்த புகார் மனுவில், “கடந்த 10 ஆம் தேதி அன்று குமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அக்கட்சியைச் சேர்ந்த துரைமுருகன், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தது போல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.  காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். அக்கட்சியின் மாநில பேச்சாளர்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசியுள்ளனர்.

இவை அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதலின் பேரில் நடைபெற்றிருக்கிறது. எனவே தேசியப்  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டிய நாம் தமிழர் கட்சியினர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.