தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்து விட்டாலும்- தொகுதிகளை இனம் காண்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள்- தங்களுக்கு ஒதுக்கப்படும்  தொகுதிகளை கண்டறிவதற் காக வந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடந்த பேச்சு வார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. நாகப்பட்டினம், தென்காசி, கோவை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இரண்டை  தருமாறு கோரியது. அந்த  கட்சிக்கு நாகப்பட்டினம்,திருப்பூர் ஆகிய தொகுதிகள் கொடுக்கப்பட்டன.

நாகப்பட்டினத்தில் பழனிச்சாமியும், திருப்பூரில் சுப்புராயனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கன்னியாகுமரி,கோவை,மதுரை ஆகிய தொகுதிகளை கொடுத்து-அதில் இரண்டை கேட்டுள்ளனர் கன்னியாகுமரியை காங்கிரசும் கேட்பதால் – சி.பி.எம்.கட்சிக்கு இடம் ஒதுக்குவதில் முடிவு எட்டப்படவில்லை.

காங்கிரஸ் கட்சி,தொகுதியை மட்டுமல்லாது வேட்பாளர்கள் பெயரையும் தி.மு.க.விடம் கொடுத்துள்ளது.

மணிசங்கர் அய்யருக்கு மயிலாடுதுறை, எஸ்.திருநாவுக்கரசருக்கு திருச்சி அல்லது ராமநாதபுரம், ஈவி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஈரோடு,செல்லக்குமாருக்கு கிருஷ்ணகிரி, கார்த்தி சிதம்பரத்துக்கு சிவகங்கை,விஷ்ணு பிரசாத்துக்கு ஆரணி  என காங்கிரஸ் பட்டியல் அளித்துள்ளது.

இது தவிர தேனி, கரூர் ஆகிய தொகுதிகளையும் காங்கிரஸ் கோருகிறது.

ஆனால் முழுமையாக உடன்பாடு ஏற்படவில்லை.கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய இடங்கள் காங்கிரசுக்கு கொடுக்கப்படுவது உறுதி எஞ்சிய தொகுதிகள் இரண்டொரு நாளில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.-

–பாப்பாங்குளம் பாரதி