கோவை ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ட்விட்டிய எச்.ராஜா மீது கோவை காவல்துரை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் அங்கு கம்யூனிச தலைவர் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. அதே போல தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு  அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூகவலைதளங்களிலும் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு வலுத்தது.  இந்த நிலையில் தனது பதிவை ராஜா அழித்துவிட்டார்.

இதற்கிடையே, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வரும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.