சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட  உள்ள மேயர், துணை மேயர் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் பதவிகள் வேண்டும் என திமுக தலைமைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், திமுக தலைமை  4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

தமிழகத்தில்  கடந்த 19ஆம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி களுக்கான தேர்தல் நடைபெற்றது, இதில் திமுக 21 மாநகராட்சிகள்,  132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளை  கைப்பற்றி  அமோக வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் உள்பட வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்று வருகின்றனர்.

இதையடுத்து,  வரும் 4ஆம் தேதி மேயர், துணை மேயர் , நகராட்சி , பேரூராட்சி தலைவர் ,துணைத் தலைவர்களுக்கான  மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த பதவிகளை பிடிக்க திமுகவிலும் கடுமையான போட்டிகள் ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளும் மல்லுகட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மேயர், துணை மேயர் , நகராட்சி , பேரூராட்சி தலைவர் ,துணைத் தலைவர்களுக்கள் தெர்ந்தெடுப்பது தொடர்பாக, கூட்டணி கட்சிகளுடன் பதவிகளை பகிர்ந்து கொள்வதற்காக 4 குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதில் அமைச்சர் கே என் நேரு, ஏ.வ. வேலு, ஆ.ராசா, ஆர்.எஸ் .பாரதி ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தொலைபேசி வாயிலாகவும் , நேரிலும் பேசி வருவதாகவும், அதன்படி 4நந்தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

கடலூர் மேயர் பதவியை விசிகவுக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு  துணை மேயர் பதவியும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சிவகாசி மேயர் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.