சென்னை: சென்னைக்கும்  புதுச்சேரி இடையே வர்த்தக கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.  சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.


சென்னையிலிருந்து புதுவைக்கும், புதுவையிலிருந்து சென்னைக்கும், வர்த்தக சரக்கு போக்குவரத்து கப்பல் தொடங்குவதாக ஆலோசிக்கப் பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இன்றுமுதல் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கொடியசைத்து  கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய ஏதுவாக புதுச்சேரி துறைமுகத்திற்கு சரக்கு பெட்டகங்களை கொண்டு சென்று அங்கிருந்து சிறிய சரக்கு கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகம் கொண்டு வந்து வெளிநாடுகளுக்கு பெரிய கப்பல்களில் கொண்டுசெல்ல ஏதுவாக இப்போக்குவரத்து பயன்படும். அதே போல் இறக்குமதியாகும் சரக்கு பெட்டகங்களை தமிழ்கத்திற்குள் கொண்டு செல்ல இப்போக்குவரத்தை பயன்படுத்தப்பட உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சரக்கு கப்பல் 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரத்தில் சென்றடையும். வாரத்திற்கு இரண்டு முறை போக்கு வரத்து இயக்கப்பட உள்ளது.

துறைமுகத்துக்கு செல்லும் கணரக வாகனங்களுக்கான மதுரவாயில் ஈரடுக்கு மேம்பால பணிகள் தொய்வில் உள்ளதால், மாற்று வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து ஊக்குவிக்கப்படுகிறது. புதுச்சேரி துறைமுகம், கடந்த ஐந்தாண்டுகளில் ஐந்து மீட்டர் ஆழத்திற்கு கடல் ஆழப்படுத்தபட்டதன் மூலம் இச்சேவை சாத்தியமானது.சென்னை துறைமுகம் பெரிய கப்பல்கள் இயக்க ஏதுவாக 16 மீட்டர் ஆழம் கொண்ட துறைமுகமாக உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுனில் பயில்வால், சென்னை மற்றும் புதுச்சேரி இடையில் சரக்கு பெட்டக சேவை இன்று முதல் தொடங்கவுள்ளது. 2017ம் ஆண்டு புதுச்சேரி அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சரக்கு பெட்டகங்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து சேவை பணிகள் முடிக்கப்பட்டு சேவை தொடங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களாக உள்ளன. சரக்கு பெட்டகங்கள் புதுச்சேரிக்கு கொண்டு செல்வதன் மூலம் நேரம் மற்றும் மாசு குறைக்கப்படுகிறது என்று கூறினார்.