கொழும்பு

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேயர்களுக்காகக் கொழும்பு வானொலி சர்வதேச ஒலிபரப்பை மீண்டும் தொடங்க உள்ளது.

தற்போது லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலி கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீனதமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா,ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன.  ஆனால் முதன் முதலில் தமிழ் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் ஆகும்.

கடந்த 1925-ல் ‘சிலோன் ரேடியோ’ என்ற பெயரில் நிறுவப்பட்ட இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபனத்துக்குத்தான் உலகின் 2-வது வானொலி நிலையம் என்ற பெருமையும் உண்டு. முதல் நிலையமான பிபிசி வானொலி 1922-ல் லண்டனில் நிறுவப்பட்டது.  கடந்த 1950 ஆம் வருடம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாப னம் தனது வர்த்தக சேவை பிரிவைத் தொடங்கியதும் இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக ஒலிபரப்பை இமயமலை உச்சியில் கால் பதித்த எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ஆகியோர் முதலில்  கேட்டார்கள்.  கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரினால் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தனது இந்திய நேயர்களுக்கான கொழும்பு சர்வதேச ஒலிபரப்பை நிறுத்திக் கொண்டது.

தவிர தமிழகத்தில் பண்பலை வானொலி நிலையங்கள் பரவலாகத் தொடங்கப்பட்ட பிறகும் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு தமிழகத்தில் கேட்காதா என்ற ஏக்கம் பல்வேறு நேயர்களுக்கு இருந்து வருகிறது.  இதையொட்டி கொழும்பு வானொலி சர்வதேச ஒலிபரப்பை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் ஒலிபரப்பை மீண்டும் தொடங்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். தீபாவளி அன்று இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச் சேவைகளின் பொறுப்பாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.