கோவை: டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்மீது,மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் இருசக்கர வாகனத்தை இயக்கிய தாக வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.

கோவை மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன் என்ற இளைஞர்.  இவர்  இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பணம் செய்து, அதை தனது யுடியூப் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதற்காக “twin throttles” யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 14ம் தேதி டிக்டாக் மூலம் பிரபலமான யூடியூபர் ஜி.பி.முத்துவை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து, கோவை பாலக்காடு சாலையில் 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேலாக வாகனத்தை இயக்கி அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்திருந்தார். வண்டியின் வேகத்தால் அதிர்ச்சி அடைந்த ஜிபி முத்து, வண்டியை நிறுத்துங்க, பயமாயிருக்கு என கத்துவதும், அதை கண்டு வாசன் சிரிப்பதுமான வீடியோ வைரலானது. இந்த வீடியோவை அவரது இணையதளத்தில்,  கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் நபர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த நிலையில், அதிகவேகமாக வாகனத்தை ஓட்டியதாக டிடிவாசன் மீது  கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 279 IPC, 184 MV act இல் போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டிடிவாசன்,   வடமாநிலத்தில் 200KMPH க்கு மேலான வேகத்தில் வாகனத்தை இயக்கி வீடியோ வெளியிட்ட நிலையில் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன் டிடிஎஃப் வாசன் தனது பிறந்த நாளை கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பாலோவர்களுடன் கொண்டாடினார் . இந்த வீடியோ காட்சி வைரலான நிலையில் சிலர் கண்டனமும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.