கோவை: இந்து மதத்தையும், இந்துக்களையும்  இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக எம்.பி. ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விமர்சனம் செய்த, கோவை மாவட்ட  பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்துக்கள் குறித்து விமர்சனம் செய்த ராசா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல்  ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது.

திமுக எம்.பி. ராசா இந்துக்கள் குறித்து பேசியது, சர்ச்சையான நிலையில், அவரை கண்டித்து நேற்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும், பல இடங்களில் பாஜகவினரும், இந்து முன்னணியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோரை இழிவாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தம ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து த.பெ.தி.க.வினர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், ராஜா மீது புகார் கூறப்பட்டுள்ளதை பதிய மறுக்கும் காவல்துறையினர்,  உத்தமராமசாமி மீது மட்டும் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அவர்மீது, வன்முறை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உத்தம ராமசாமி மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தம ராமசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்துள்ளது கண்டிக்கத்தகது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக எம்.பி ஆ.ராசாவை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்க வும் இல்லை, கைது செய்யவும் இல்லை. அவரை கண்டித்ததற்காகக் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்துள்ளது கண்டிக்கத்தகது.

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியவரை கைது செய்யாமல், இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? என கேள்வி எழுப்பி, அடக்குமுறைகளுக்கு என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து, பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.