சென்னை: தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பான விளம்பரம் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட பேருந்துகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை கடற்கரை சாலையான  காமராஜர் சாலையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  தொடங்கி வைத்தார்

மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற (ஜூலை) 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 188 நாடுகள் பங்கேற்க இருப்பது தற்போது உறுதி ஆகி உள்ளது.  இந்த நாடுகளை சேர்ந்த மொத்தம் 343 அணிகள் அதிகாரப்பூர்வ போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து உள்ளன.

போட்டியின்படி, ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு ஒரு கேப்டன், இரு குழுவை ஒருங்கிணைக்க ஒரு தலைவர் என்ற கணக்கில், ஒரு அணியில் 13 பேர் இடம் பெறுகிறார்கள். ஒரு அணியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் போட்டிகளை பதிவு செய்துள்ள நாடுகளின் தூதர்கள், அதிகாரிகள், வீரர்கள் போட்டி நடக்கும் இடத்தை பார்க்க வரக்கூடும் என்பதால், மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஓட்டல் மாடியில் உள்ள செஸ் ஒலிம்பியாட் அலுவலகத்தின் வரவேற்பு அறை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் உலக நாடுகளைச் சேர்ந்த, காத்திருக்கும் இடம், பொதுக் கூடம், ஆலோசனை பகுதி, நுழைவு வாயில் என அனைத்து இடங்களிலும் செஸ் சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் செஸ் போர்டுகள் வைத்து அலங்காரம் செய்து உள்ளனர்.