சென்னை

பாஜக மக்களை ராமர் கோவில் திறந்து திசை திருப்புவதாக முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இன்று சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்.

அவர் தனது உரையில்.

”தற்போது திமுக பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு, ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையை கடைப்பிடித்து வருபவர். கருணாநிதியின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்தவர். இது பாலுவின் வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம். பாஜகவை வீழ்த்தக்கூடிய இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கிய பங்கு உள்ளது. 

வருகிற நாடாளுமன்றத் தேர்தல், யார் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல். கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்காமல் இறுதிக் காலத்தில் ஒரு கோவிலைக் கட்டி பாஜக தலைமை மக்களைத் திசை திருப்ப பார்க்கிறது. 

தேர்தலை சந்திக்கும் பாஜகவுக்கு தங்கள் சாதனைகளை மக்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதனால் முழுவதுமாக கட்டி முடிக்காத கோவிலை அவசரமாகத் திறந்து, சாதித்துவிட்டதாக காட்டுகின்றனர். இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இது உறுதி.” 

என்று கூறி உள்ளார்.