சென்னை

உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த 17 நாட்களாகப் போராடி தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்குள் குழாய் வழியாகச் சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், சக்கரங்கள் பொருத்திய ‘ஸ்டிரெச்சர்கள்’ மூலம் தொழிலாளர்களை ஒருவர் பின் ஒருவராக மீட்டனர்.

சுரங்கப்பாதையில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில்,

“உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது. மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்”

என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.