சென்னை

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை ஹாங்காங் நேரடி விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது.

கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்குக்கு நேரடி விமானச் சேவையை இயக்கி வந்தது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சென்னையில் இருந்து உலகம் முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பியதால் சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன.  ஆயினும் ஹாங்காங், ஜித்தா உள்படப் பல நகரங்களுக்கு இடையே நேரடி விமானச் சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வருகிறது.

அத்துடன் சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு ஹாங்காங் விமான நிலையம் இணைப்பு விமான நிலையமாக இருப்பதால், ஹாங்காங்கிற்கு நேரடி விமானச் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.

சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதியில் இருந்து கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் ஹாங்காங்-சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமானச் சேவை வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

விமான நிலைய அதிகாரிகள் சென்னை ஹாங்காங் நேரடி விமானச் சேவை 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட உள்ளதால் தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.