சென்னை: கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திரும்பத் திறந்து, அங்க தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதல்வர்  எடியூரப்பாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகாவில் தங்கியுள்ள தமிழ் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக கர்நாடகாவில் பல தமிழ்வழி கல்வி பள்ளிகள் செயல்பட்டு வந்தன.  ஆனால், தற்போது பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.  இதனால், அங்குள்ள தமிழர்கள் தமிழ் படிக்க முடியாத நிலை உள்ளது.
இதுதொடர்பாக  கர்நாடக தமிழ்ச்ங்கம்,   மூடப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கத்திலிருந்து தமிழக முதலமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது,

“கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக, தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் வழியில் கல்வி கற்க கர்நாடக அரசு, பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றது. இத்தகைய தனியார் பள்ளிகளுக்கான ஒப்புதல் மற்றும் மானியம் ஆகியவற்றையும் கர்நாடக அரசு வழங்கி வருகின்றது.
இந்நிலையில், கர்நாடகாவில் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனவும், தமிழ்வழியில் கல்வி கற்பதற்கான புதிய தனியார் பள்ளிகளைத் தொடங்க கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கவில்லை எனவும், கர்நாடகா தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

கர்நாடக மாநில வளர்ச்சிக்காக தமிழர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். முக்கியமாக, கோலார் தங்கச்சுரங்கம், ஹட்டி தங்கச்சுரங்கம், சந்தூர் மாங்கனீஸ் சுரங்கம், சிக்மகளூரு, மங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள காபி எஸ்டேட்டுகளின் வளர்ச்சிக்காக முக்கியப் பங்காற்றியுள்ளனர். மேலும், கட்டிடத் தொழில்கள், விவசாயம் ஆகியவற்றிலும் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமீபத்தில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். தமிழ் வழியில் படிக்கத் தனியார் பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்க வேண்டும். வேறு மொழிவழிப் பள்ளிகளாக மாற்றப்பட்ட பள்ளிகளை மீண்டும் தமிழ்வழிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும்”.
இவ்வாறு  அதில் கூறியுள்ளார்.