சென்னை,

பொங்கல் திருநாளையொட்டி 1,686 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1500 பணியாளர்களுக்கு தமிழக முதல்- அமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டு நர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்கள்) 60 பேர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப் பதக்கங்கள்’ வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு மாதாந்திர பதக்கப்படி அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப 2018 பிப்ரவரி 1-ந் தேதி முதல் வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் காவல்துறை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இயக்குநர், மற்றும் சிறைத்துறை தலைவர் அவர்களால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.

காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய்படைப் பிரிவில் பணி யாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் ஆக மொத்தம் 6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற் சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘தமிழக முதல்- அமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது.

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்க தொகையாக காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூ.4 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூ.6 ஆயிரமும், காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, முதல்-அமைச்சரால் பதக்கங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.