சென்னை: 
னவரி 4ஆம் தேதி பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கத் தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன்படி,பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து,பொங்கல் சிறப்புத் தொகுப்புடன் ரொக்கத்தொகை ஆகியவை நியாய விலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதைக் கண்காணிக்க வேண்டும் என மண்டல பதிவாளர்களுக்குக் கூட்டுறவு சங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
ஆனால்,அதன்பின்னர்  மண்டல பதிவாளர்களுக்குக் கூட்டுறவுச் சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத் தொகை என்ற வார்த்தையை நீக்கம் செய்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
அதே சமயம்,பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.அதன்படி, பெருவாரியாகச் சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு விற்பனை முனைய இயந்திரத்தின் (POS) மூலம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும்,பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் அந்தந்த மாவட்ட ஆட்சியரையே சாரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜனவரி 4 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். அதன்படி,தலைமைச்செயலகத்திலிருந்து நாளை மறுதினம் காலை 10.30 மணிக்கு இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.அதன்படி, அனைத்து நியாய விலை கடைகளிலும் நாளை மறுநாள் முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது.