சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 7ந்தேதி (நாளை மறுதினம்) சென்னை திரும்புகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய தமிழ்நாடு அரசு, தொடர்ந்து தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு வெளிநாடு சென்றது. அதன்படி, கடந்த ஜனவரி  மாதம் 27-ந்தேதி  காலை ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார். அவரது பயணம் 15 நாட்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12மணிநாளில் முடிவடைந்து வரும் 7ந்தேதி சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்கட்டமாக ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்,  அங்கு, சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவன நிர்வாக இயக்குனர்களை  சந்தித்து பேசினார். இதன் காரணமாக 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்த நிறுவனம் முன்வந்துள்ளது. இதேபோல் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  இது தவிர மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.

அதுபோல,  பட்ஜெட் கூட்டத்தொடர் 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளதாலும், அதனைத் தொடர்ந்து நிதி நிலை அறிக்கை 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாலும், ஆளுநர் உரையின் வரைவில் இடம்பெற வேண்டிய முக்கிய விவரங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஆகியவை குறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர்  த.உதயச்சந்திரன்,  வளர்ச்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து, இந்திய நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதுதொடர்பான திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சி பணிகள், தொகுதி நிலவரம், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து, காணொளி காட்சி வாயிலாக பற்றி கேட்டறிந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ஸ்பெயின் நாட்டு சுற்றுப் பயணத்தை முடி வடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,  நாளை மறுநாள் (புதன்கிழமை) மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். 7-ந்தேதி காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.