சென்னை: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகளுடன் நாளை முதல்வர் காணொளி காட்சி மூலம் கலந்துரையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலவச  மின் இணைப்பு வழங்கக்கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக, 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை கடந்த 23.9.21 அன்று தொடங்கி வைத்தார். அதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில்  இருந்து , கடந்த ஒரு ஆண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின்  கலந்துரையாடல் நிகழ்ச்சி நாளை (16-ந்தேதி) காணொலி மூலம் நடக்கிறது.

முன்னதாக,  இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் வழங்குவது குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை என்ஜினீயர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது,  ‘தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என்று அலுவலர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கக்கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு கடந்த 6 மாத காலத்திற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த திட்டத்தை சிறப்பிக்கும் வகை யில் 16-ந்தேதி (நாளை) முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வருகை தந்து 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்குவதற்கான விழாவுக்கு தலைமை ஏற்கிறார். பின்னர் பயன் அடைந்துள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.

இவ்வாறு கூறினார்.