சென்னை: வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்குத் தலா 20 இலட்சம் ரூபாய் நிதி உதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுதாரர்களை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (13-7-2021) நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாயை வழங்கினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் N. பாலமுருகனின் தாய் திருமதி குருவம்மாள், கிருஷ்ணகிரி மாவட்டம், இராகிமானப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் N. சந்தோஷ் தாய் திருமதி சித்ரா ஆகியோருக்கு முதல்வர் நிதியுதவி அளித்தார்.
இவர்களை போன்றே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த படை அலுவலர் S.ஆனந்தின் மனைவி பிரியங்கா நாயர், திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் S. சபரிநாதனின் தாய் திருமதி S. மனோன்மணி ஆகியோருக்கு முதல்வர் நிவாரண நிதியை அளித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.