சென்னை: இரண்டு பயணமாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  திருவாரூர் புறப்பட்டார். இன்றும், நாளையும் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர், அப்போது ஏராளமான நலத்திட்ட உதவிகளையும், நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் திருச்சி, திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு செல்கிறார். திருச்சிக்கு செல்லும் முதலமைச்சர் அரசு சார்பில் நடக்கும் நிகச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

 திருச்சிக்கு காலை 11.15 மணிக்கு வருகிறார். திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சாலை மார்க்கமாக திருவாரூருக்கு வரும் அவர், முன்னதாக மாவட்ட எல்லையான கோவில் வெண்ணியில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் அளிக்கப்படு சிறப்பான வரவேற்பை ஏற்கிறார்.

அதன்பின்னர் இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது சொந்த  வீட்டில் தங்குகிறார்.

மறுநாள் ( நாளை 22-ம் தேதி) திருவாரூரில் இருந்து கார் மூலம் மன்னார்குடிக்குச் சென்று மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழாவை தலைமையேற்று நடத்தி வைக்கிறார்.

பின்னர் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு மீண்டும் திருச்சி விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து சென்னை செல்கிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, அங்கு 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில், டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக வரும் 24-ம் தேதி ஈரோடு செல்கிறார். அங்கு 24, 25 ஆகிய இரு நாட்கள் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.