திருக்குவளை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற பள்ளியில் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, 2022ம் ஆண்டு  செப்டம்பர் 15-ஆம் தேதி, பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக  மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார், மாணவர்களிடையே உணவருந்தினார்.

இதனையடுத்து,  2023 பிப்ரவரி மாதம் இறுதியில் மேலும் 500 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, மீதமுள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ வரும் ஆகஸ்ட 25 முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி  படித்த திருக்குவளை பள்ளியில்  உணவு பரிமாறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ மாணவியருடன் கலந்துரையாடியபடி  உணவருந்தினார்.

இதன்மூலம் இன்று  தமிழ்நாட்டில் உள்ள 31,008 தொடக்க பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது; இதன்மூலம் 15.75 லட்சம் மாணவர்கள் பயனடைவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.