சென்னை: ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 41 ஆண்டுகளுக்கு வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனால், மகளிர் ஹாக்கி அணிக்கு பதக்கம் ஒன்று உறுதியாகி உள்ளது.

உலகின் நம்பர் டூ அணியான ஆஸ்திரேலியாவை, இந்தியா எதிர்கொண்டது. இந்தியாவின் குஜ்ரித் கவுர் ஆட்டம் துவங்கிய 22 ஆவது நிமிடத்தில் வெற்றி கோலை அடித்தார் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, வரலாற்றில் முதன்முறையாக, இந்திய மகளிர் ஹாக்கி அணி, அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் இரண்டும் ஒரே ஒலிம்பிக்கில் அரை இறுதிக்கு முன்னேறியது இதுவை முதல் முறையாகும்.

இதற்கு முன்னர் 1980 மற்றும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே பங்கெடுத்துள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி முதன்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

இந்த நிலையில், அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல வாழ்த்தி,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனார். அதில்,  ”ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வெற்றியால் நான் அகமகிழ்ந்துள்ளேன். இதேபோல் இறுதிச் சுற்றுக்கும் முன்னேறி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல மகளிர் அணிக்கு எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.