சென்னை:
பெருங்குடி தீயை அணைத்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் மறுசுழற்சி செய்யும் இடத்தில் புதன்கிழமை மாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. திறந்தவெளி என்பதாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீ வேகமாகப் பரவியது. 15 ஏக்கரில் தீ பரவிய நிலையில், 100க்கும் மேற்பட்ட லாரிகளின் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, 12 தீயணைப்பு வாகனங்கள், 2 ஸ்கைலிப்ட் வாகனங்கள் மூலம் 90 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 நாட்களாக தீயை அணைக்க போராடி வந்தனர்.

இதனால் பெருங்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள துரைப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளிலும் புகை மூட்டம் சூழ்ந்தது. மூச்சுத் திணறல், கண்ணெரிச்சல் என அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதியடைந்து வந்தனர். நேற்று வரை பயங்கரமாக புகை வெளியேறிய நிலையில் தற்போது தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

இந்நிலையில், பெருங்குடி தீயை அணைத்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.