மதுரை: மறைந்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நேரில் சென்று  மரியாதை செலுத்தினார்.

மதுரை, புதிய எல்லிஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  என். நன்மாறன்  உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்பட கட்சியினர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று முன்தினம் இரவு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால்செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாபாளையத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.