சென்னை: அம்மா மினி கிளினிக் திட்டத்தின்படி தமிழகத்தில் 2ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்த நிலையில், முதல்கட்டமாக இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 630 மினி கிளிக்குகளை முதல்வர் பழனிசாமி  தொடங்கிவைத்தார் .
இன்று காலை சென்னை ராயபுரம், வியாசர்பாடி,  மயிலாப்பூர்  உள்பட 3 இடங்களில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 200 மினி கிளினிக்குகள்  அமைக்கப்பட உள்ளது. இதில், முதல்கட்டமாக  47 மினி கிளினிக்குகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதில், 20 இடங்களில் இன்று முதல் மினி கிளினிக்குகள்  செயல்படத் தொடங்குகிறது.
இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர் என 3 பேர் பணியில் இருப்பார்கள்.
மினி கிளினிக்குகள் சென்னையில், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்
இங்கு, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு, பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.தொடர்ந்து, வரும் 16-ந்தேதி (நாளை மறுநாள்) சேலம் மாவட்டம் எடப்பாடியில், அந்த மாவட்டத்துக்குரிய 40 மினி கிளினிக்குகளை முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திறந்து வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், தற்போதைய  நிலையில்,  8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மருத்துவமனை உள்ளது.  மொத்தம்  1,851 ஆரம்ப சுகாதார நிலையங்கள்  உள்ளன. முதல்வர் அறிவித்துள்ள மினி கிளினிக் திட்டத்தினால், 3 கி.மீட்டர் தூரத்துக்கு ஒரு மருத்துவமனை அமையும் என்று கூறப்படுகிறது.