சென்னை: தமிழகத்தில் 102 கோடியே 94இலட்சத்து 60 ஆயிரம் (ரூ.103 கோடி) ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி,  அரசு கலைக்கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் மையம் ஆகியவற்றில் ரூ.102 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், பல்நோக்கு கூடம் உள்ளிட்டவற்றை இன்று திறக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

’’முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (28.10.2021) தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கலைக் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் மையம் ஆகியவற்றில் 102 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், பல்நோக்குக் கூடம், கூட்டரங்கம், கழிப்பறைகள், விடுதிகள், பணியாளர் அறைகள், புத்தாக்க மையம் ஆகியவற்றைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

உயர் கல்வியினை அனைவரும் அணுகிப் பெறும் வகையிலும், சமத்துவம் மற்றும் சமூக நீதி மனப்பாங்குக்கு உட்பட்டு அனைத்துப் பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள் கொண்டுவரும் வகையிலும் கொள்கைகள் வகுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகக் கட்டிடம் மற்றும் இதர கட்டிடங்கள்; செங்கல்பட்டு – ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறைகள்; சென்னை மாவட்டம், வியாசர்பாடி – டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கூடம்; காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் – எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகக் கட்டிடங்கள் மற்றும் 2 கழிப்பறைத் தொகுதிகள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்– அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பணியாளர் அறை; கிருஷ்ணகிரி –அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள்; விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம்– டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 96 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள்; விழுப்புரம்– அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகக் கட்டிடம்; திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள்; தருமபுரி மாவட்டம், பாலக்கோடு– எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், 4 ஆய்வகக் கட்டிடங்கள் மற்றும் கழிப்பறைகள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு – அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறைகள்; மதுரை மாவட்டம், மதுரை– அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 வகுப்பறைகள், 1 ஆய்வகம், 3 பணியாளர் அறைகள் மற்றும் கழிவறை; மதுரை –ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் விடுதிக் கட்டிடம்; கீழக்குயில்குடி –அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதி; திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்– எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 2 கழிப்பறைத் தொகுதிகள்; நிலக்கோட்டை-அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம், வீரப்பாண்டி–அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 கூடுதல் வகுப்பறைகள்; விருதுநகர் மாவட்டம், சிவகாசி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 19 ்லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 3 கழிப்பறைத் தொகுதிகள்; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி–அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பணியாளர் அறை; கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 கழிப்பறைத் தொகுதிகள்; தொண்டாமுத்தூர் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள்; கோயம்புத்தூர் – கொடிசியா சாலையில் அமைந்துள்ள மண்டல அறிவியல் மைய வளாகத்தில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர்களின் புத்தாக்கத் திறனை மேம்படுத்த தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஆய்வக வசதிகளுடன் கூடிய புத்தாக்க மையம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அண்ணா அறிவியல் மைய வளாகத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர்களின் புத்தாக்கத்திறனை மேம்படுத்த தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஆய்வக வசதிகளுடன் கூடிய புத்தாக்க மையம்; திருப்பூர் மாவட்டம், பல்லடம் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 4 கழிப்பறைகள்; திருப்பூர் – சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 கூடுதல் வகுப்பறைகள், பணியாளர் அறைகள் மற்றும் கழிப்பறைகள்; திருப்பூர் – எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறைகள், பணியாளர் அறை மற்றும் கழிப்பறை; சேலம் மாவட்டம், எடப்பாடி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும் இதரக் கட்டிடங்கள்; நீலகிரி மாவட்டம், கூடலூர் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 வகுப்பறைகள் மற்றும் 4 கழிப்பறைத் தொகுதிகள்; பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் – கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள்; கூடுவெளி – அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் – அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகம்; கும்பகோணம், அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கூட்டரங்கம்; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 4 கழிப்பறைத் தொகுதிகள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி – ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள், கழிவறை மற்றும் மகளிர் விடுதிக் கட்டிடம்; திருநெல்வேலி – கோவிந்தபேரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகம், கழிப்பறைத் தொகுதிகள் மற்றும் இதரக் கட்டிடங்கள்; தென்காசி மாவட்டம், சுரண்டை – காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் மற்றும் இதரக் கட்டிடங்கள் என மொத்தம் 102 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் கல்வித்துறை கட்டிடங்களைத் தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்‘’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.