குன்னூர்: ஊட்டியில் 124வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தார்.

3நாள் பயணமாக நேற்று கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு ஊட்டி சென்றடைந்தார். அதைத்தொடர்ந்து இன்று காலை அங்குள்ள  தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை  இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த மலர் கண்காட்சியானது இன்று முதல்  24ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது.  மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டுகளித்தார்.

மலர்கண்காட்சி மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி,  கடைகளை பார்வையிட்டவர், இறுதியில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி யில் கலந்துகொண்டு தனது மனைவி துர்காவுடன் அமர்ந்து கண்டுகளித்தார். முன்னதாக சுற்றுலா பயணிகளுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

ஊட்டி, மலர் கண்காட்சியில் ஐந்து லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ள நிலையில் மேரி கோல்ட், பிரஞ்ச் மேரி கோல்ட், பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா உட்பட 275 ரகங்களில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

35 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கும் பல லட்சம் வண்ண மலர்கள் கொண்ட கண்காட்சியை பலரும் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர், கொத்தர், பணியர், இருளர், முள்ளு குறும்பர், காட்டு நாயக்கர் போன்ற பழங்குடியினர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 6000 மஞ்சள்நிற கார்னேஷன் மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.