சென்னை: கைத்தறித் துறை சார்பில் ரூ.6.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல்.29) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் கீழ் செயல்படும் கைத்தறித் துறை சார்பில் தஞ்சாவூர், கரூர், விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 96 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நெசவுக் கூடம், காட்சியறையுடன் கூடிய கிடங்கு, பொதுவசதி மையக் கட்டடம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடங்கள் ஆகிய கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ், நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் காளிகாவலசு தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 200 கைத்தறிகள் மற்றும் பிற வசதிகளுடன் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நெசவுக்கூடம் மற்றும் சென்னிமலை தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காட்சியறையுடன் கூடிய புதிய கிடங்கை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், திருச்சி மாபெரும் கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் கைத்தறி, உபகரணங்கள் மற்றும் நெசவு தொடர்பான பிற பணிகளை மேற்கொள்ளும் வகையில் 58 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருவிடைமருதூர் பொது வசதி மையக் கட்டடம் மற்றும் கரூர் மாவட்டத்தில் 74 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் இராமச்சந்திராபுரம் பகுதிகளில் 1 கோடியே 43 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடங்கள் என மொத்தம் 6 கோடியே 96 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கைத்தறித் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.