சென்னை:
பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற பவினாபென்னுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பவினாபென் பட்டேல், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங் உடன் மோதினார். இதில் 3-0 என்ற செட் கணக்கில் பவினாபென் பட்டேல் போராடித் தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், டோக்கியோ பாரலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி பவினாபென் வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாவுக்கு குஜராத் அரசு ரூ. 3 கோடி பரிசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.