சென்னை:
திமுக எம்எம்எல்ஏவும், சென்னை மேற்கு மாவட்ட  திமு கழகச் செயலாளராக இருந்த எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது இடத்துக்கு புதிய மாவட்டச் செயலாளராக நே.சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுபோல, ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு மேற்கு மாவட்ட  திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.  இது தொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன்  கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் மரணம் அடைந்தார். அதையடுத்து,  சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.
ஜெ.அன்பழகனின் மகன் நியமிக்கப்படுவார் என்றும், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி நியமிக்கப்படுவார் என்பது உள்பட பல்வேறு வதந்திகள் பரவி திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.
இந்த நிலையில்,  சென்னை மேற்கு மாவட்ட புதிய செயலாளராக  நே.சிற்றரசு நியமிக்கப்பட்டுள் ளார்.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., மறைவெய்திய காரணத்தால், மாவட்டக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற  நே.சிற்றரசு, சென்னை மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, ஜெ.அன்பழகனின் மகன் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து,  திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சிற்றரசு அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக, தியாகராயநகர் மகாலட்சுமி தெருவை சேர்ந்த ராஜா அன்பழகன் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக தலைமைக் கழக ஒப்புதலோடு  இன்று முதல் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவர் என்றும் உதயநிதி அறிவித்துள்ளார்,