சென்னை

சென்னையில் வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 

நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வருகிறது. இதுவரை அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வரை பதிவாகியுள்ளது. மேலும் சேலம், கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் போன்ற இடங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்துகிறது. சென்னையில் மீனம்பாக்கத்தில் அவ்வப்போது 100 டிகிரி  நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி என வெப்பம் பதிவாகிறது.

சென்னையில் இதுவரை அதிக வெப்பம் பதிவாகவில்லை என்றாலும், வெப்பத்துடன் கூடிய உஷ்ணம் இருந்து வருகிறது. மேலும் கடலோரப் பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 80 சதவீதம் வரை இருந்து வருகிறது. எனவே சென்னையில் வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம் ஆகியவற்றால் அசௌகரியமான நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் இது குறித்து சென்னை மக்களுக்கு,

”* வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை மக்கள் வெளியில் வரவேண்டாம்.

* இந்த நேரங்களில் வெளிச் செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

* அடிக்கடி தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

* மதுபான வகைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

* எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது. பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை பயக்கும்.”

என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.