சென்னை

ண்ணீருக்காகப் பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் உறுதியாக வழங்கப்படும் முறையை தொடங்கியுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம்1 அறிவித்துள்ளது.

சென்னையில் தண்ணீருக்காகப் பதிவு செய்பவர்கள் பத்து நாட்கள் வரை காத்திருக்கவேண்டும் என்ற நிலை இருப்பதாக சமூகவலைதளங்களில் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களை முன்னிட்டு தண்ணீர் வழங்கும் சேவையை முற்றிலும் புதுப்பித்துள்ளதாக சென்னை குடிநீர் வாரிய இயக்குநர் டி என் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

மாற்றி அமைக்கப்பட்ட படி குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து ஏழு முதல் பத்து நாட்களுக்கு பிறகுதான் அடுத்த முன்பதிவைச் செய்யமுடியும் எனவும் பதிவு செய்தவர்களுக்கு 48 மணிநேரத்திற்குள் தண்ணீர்  வழங்கப்பட்டுவிடும் என சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ டிவிட்டர் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனிவீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மற்றும் இணையம் வாயிலாகத் தண்ணீர் தேவை குறித்து முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு இணையத்தில் பதிவு செய்பவர்கள் வங்கி அட்டை அல்லது கடன் அட்டை மூலம் பணத்தைச் செலுத்தலாம். அதே நேரத்தில் பணத்தை  நேரடியாக விநியோகத்திற்குப் பிறகு செலுத்த எண்ணுபவர்கள், 3000 லிட்டர் வரை மட்டும் பதிவு செய்து, தண்ணீர் வந்தபிறகு, பணம் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவை பொருத்து பதிவு செய்யும் நேரமும் முறைப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி காலை ஆறு மணி முதல் 3,000 லிட்டர் பதிவு செய்யலாம், 6,000 லிட்டர் தேவைப்படுவோர் காலை 8 மணிக்குப் பதிவு செய்யலாம், 9,000லிட்டர் தேவைப்படுவோர் காலை 10  மணிக்குச் செய்யலாம். 12,000 மற்றும் 16,000 லிட்டர் தேவைப்படுவோர் மதியம் 12 மணி முதல் பதிவு செய்யலாம் என டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்பதிவு செய்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தேதியை அல்லது அளவை மாற்றமுடியாது என்ற விதியும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய முறைப்படி தனிவீடுகளில் வசிப்பவர்கள் 9,000 லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் கோரலாம். அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டாகப் பணம் கொடுத்து வாங்குவதால், 9,000 முதல் 16,000 லிட்டர் வரை பெறமுடியும் என்ற விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.